Thursday, May 16, 2013

எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்

சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் அவர்களின் "இதற்கு முன்பும், இதற்கு பிறகும்" புத்தகத்தை வாசிக்க நேர்ந்த முதல் பக்கத்திலேயே அடிமையாக்கிய கவிதை...


அறியத்தான் வேண்டுமா
நீ அதை
புல் தரையின்  நடுவே கிடக்கும்
ஒரு கைப்பையைப் பற்றி
ஒரு இடிந்த சுவரில் எழுதப்பட்ட
சூசகமான வாக்கியம் பற்றி
ஒரு இரவிலும் அணைக்கப்படாத
ஒரு குழல் விளக்கினைப் பற்றி
கொடியில் காயும் ஓர் ஆடையின்
ரத்தக் கறை பற்றி
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
*
காரணங்கள் உனக்கு
தெரியத்தான் வேண்டுமா
ஒரு வழிப்போக்கனின் பாதையில்
எங்கிருந்தோ கேட்கும்
தீனமான அழுகுரல்கள் பற்றி
எல்லாக் குளிர்காலங்களிலும்
தவறாமல் ஏற்படும்
மனநோய் பற்றி
கைவிடப்பட்ட ஒரு வீட்டின்
திறந்துகிடக்கும்
எல்லா வாயில்களும் பற்றி
தழும்பும் இரு முலைகளுக்கு நடுவே
பார்க்க நேரும்
ஒரு நீளமான தீக்காய வடு பற்றி
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
*
நீ கண்டுபிடிக்காமல்  இருப்பதே
நல்லது
          அவர்கள் ஏன்
தங்களைக் குறித்து
அவ்வளவு சிறிய பொய்களைச்
சொல்கிறார்கள் என்பதை
அவர்கள் ஏன்
பேசத் தொடங்கும்போதே
அழத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதை
அவர்கள் ஏன்
செய்யாத குற்றங்களுக்குக்கூட
மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதை
அவர்கள் ஏன்
எந்த நிபந்தனையும் இல்லாமல்
தம்மை ஒப்புக்கொடுத்தார்கள் என்பதை
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
*
நீ
பேச்சுக்கொடுக்காதே
          தினமும் டைரி எழுதும்
பழக்கம் உள்ளவர்களோடு
இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்ததும்
எல்லாம் சரியாகிவிடும் என்று
நம்புகிறவர்களோடு
தனக்குத் தானே பேசிக்கொண்டு
சாலையைக் கடப்பவர்களோடு
நிராகரிக்கப்பட்ட காதல்களுக்காக
குடிப்பவர்களோடு
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
*
நீ கதைகேட்க
விருப்பம் கொண்டவன் எனில்
பணம் கொடுத்து வரவழைத்த
வேசியிடம் அதைக் கேட்காதே
உதவி நாடி வந்த அதிதியிடம்
அதைக் கேட்காதே
உன்னால் வெற்றிகொள்ளப்பட்டவர்களிடம்
அதைக் கேட்காதே
அவமானங்களை நேர்த்தியாக
மறைத்துக் கொள்பவர்களிடம்
அதைக் கேட்காதே
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
*
நீ கதைகளை அறிந்துதான்
தீரவேண்டுமெனில்
அறிந்துகொள்
          வேட்டையாடப்பட்ட
          ஒரு சிறுத்தையின் கண்களை
திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட
ஒரு சிறுவனின் கண்களை
ஆழ்ந்த புணர்ச்சியில்
வெறுமையாகும் சாம்பல் கண்களை
புன்னைகையுடன்
உன்னை அணைத்துக்கொள்ளும்
துரோகத்தின் கண்களை
எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்
***
நன்றி
-மனுஷ்ய புத்திரன்