வாய்விட்டுச் சிரித்துக்கொண்டும், ஓவென அழதுகொண்டும் நடக்கும் மனிதர்களின் நிழல்களெல்லாம், மிதிபட்டபடியே இருக்கிறது.
குருதி சிந்தி நடக்கும் நிழல்களுக்கான ரத்தக்குழாய்களெல்லாம் வழிநெடுகிலும் ரத்த நிழலை சிந்தியபடியே இருக்கிறது,
என் நிழலை கவனிப்பாராருமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு அமானுஷ்ய நேரத்தில்,
தெருவில் நடக்கும் ஒரு பூனையின் நிழல், என் ரத்த நிழலை நக்கிக்கொண்டும்,
வானம் மறைத்து, ஒரு மேக நிழல், என் நிழலுக்கு நிழல் கொடுத்துக்கொண்டும்,
இருபதடி உயர தென்னை இலை நிழல், தரைவரை வந்து என் கண்ணீர்துடைத்துக்கொண்டும்,
ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தது.
ஓர் அடர்த்தியான இரவில், விழித்துக்கொண்டிருக்கும் நிழலின் நீள்குறியின் பிசுபிசுப்பில் விழிக்கும்
மனிதன் தன் நிழலை நினைக்கிறான்,
நிழல்கள்தான் நிஜம், நிஜங்கள்தான் நிழல் என்று நிழல்களை கௌரவித்து,
நிழல்களுக்காக கவிதை எழுதுகிறான்.