முரளிக்கு தனிமை பிடிக்கும், வீட்டில் மங்கலத்தின் புலம்பல், அரைத்துக்கொண்டிருக்கும் மாவு மிஷினைப்போன்றது. வீட்டில் இருக்கும் இன்டு, இடுக்கு, மூலை முடுக்கு என்று எதையும் விட்டுவைக்காது. இதனாலேயே முரளி மாடிக்கு போய்விடுவது பழக்கம். அவன் மாடிக்கு போவதற்கான இன்னொரு காரணம் சுடுகாட்டில் தங்கியிருக்கும் வெட்டியான் குமார்.
முரளியின் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் கடலும், இன்னொரு பக்கம் சுடுகாடும் தெரியும். சிறுவயது முதலே அங்கு வெட்டியானாக இருந்து வருபவன் குமார். "பாட குமாரு" என்பது அவனுடைய செல்லப்பெயர். சுருள் முடி,அழுக்கான வெள்ளை வேட்டி, ஆரஞ்சு நிற கோடுபோட்ட சட்டை, நைந்து போன மங்கிய சிகப்பு நிற துண்டுமே அவனது சொத்து. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வேட்டியை மட்டும் மாற்றிக்கொள்வான். சிறுவயதுமுதலே சுடுகாட்டில் இறந்துவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் அலுவலக கட்டடத்திலேதான் வசித்து வருகிறான்.
அவன் சிறுவயதில் சுடுகாட்டில் வீசப்பட்ட காலத்தில் அங்கு அலுவலக பணியாளராக இருந்த சுந்தரம் தான் அவனை எடுத்து வளர்த்து எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். பிணம் வரும் நேரங்கள் போக மற்ற நேரங்களில் அப்போது வெட்டியானாக இருந்த தம்புடாவிடம் சில பல பாடல்களை கற்றுக்கொள்வான்.
தம்புடா 70 வயதானவர் என்பதற்கான அறிகுறியே தெரியாது, வாய் திறந்து பேசத்துவங்கினால் மூன்றில் ஒருவார்த்தை கெட்ட வாரத்தைதான் பேசுவார். அவர் பிணங்களை பார்க்கும் விதம் விசித்திரமாக இருந்தது குமாருக்கு. உறவினர்கள் பாடை கட்டி மாலை மறியாதையோடு சுடுகாட்டிற்கு கொண்டுவந்து எறிப்பதற்காக பிணத்தை விறகு கட்டைகளினூடே வைத்த பிறகு, தம்புடா பாடும் தேவாரப் பாட்டை கேட்க கேட்க விறகுகள் கூட கண்ணீர் விடும். தம்புடா பிணத்தை அவர்கள் உறவினர்களுக்கு முன்னே அவமறியாதையாக பேச மாட்டார். வயதானவர்களை அண்ணன், தங்கை என்றும் இளைய பருவத்தினரை பிள்ளை, பெண்டு என்றும், குழந்தைகளை பேரன், பேத்தி என்றுமே அழைப்பார். சிலநேரங்களில் பாடல் பாடும்போது அவரும்கூட அழுதுவிடுவார். பாடல் முடிந்து பிறகு ஒரு சிறுசடங்கு நடப்பது வழக்கம், இறந்தவர்களின் வாய்க்கு அரிசி போட்டு பக்கத்தில் இருக்கும் குவளையில் உள்ள நீரால் தலைக்கு பின்னால் நீரைச்சொட்டவிட்டு தன்னிடம் இருக்கும் சில்லரைகளை அரிசி எடுத்த பையில்போடுவது. இவரின் பாடல்களில் இருக்கும் கனத்த சோகத்திற்காகவே சில்லரைகளை அதிகம் போடுவார்கள். இவற்றை எதற்காக செய்கிறார்கள் என்பது குமாருக்கு தெரியாது, ஆனால் சில்லரைகள் விழுவதைப்பார்க்க குமாருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.அத்தனை சில்லரைகளும் குமாருக்குதான் என்று தம்புடா ஏற்கனவே கூறியிருக்கிறார்.
பிணங்கள் வரும் ஒவ்வொரு நாள் இரவும் தம்புடா இரண்டு கட்டு காஜா பீடி, குடிப்பதற்கு சரக்குகள், மிச்சர் பாக்கட்டுகளை கொண்டுவந்து குமாரிடம் புலம்புவது வழக்கம். இறந்தவர்கள் மட்டும் தம்புடாபேசுவதை கேட்க்க நேர்ந்தால் இவரை பழிவாங்கவே மறுஜென்பம் எடுப்பார்கள் என்று நினைத்துக்கொள்வான். அண்ணன் தங்கை என்று அழைத்தவர்களை தேவிடியா மகன், மகள் என்று கரித்துக்கொட்டுவார் தம்புடா.
-தொடரும்