இப்போதெல்லாம் பட்டாம்பூச்சிகளை எளிதல் தேடிவிட முடிவதில்லை,
அதன் வண்ணங்கள் கூட மறந்தேபோய்விட்டது,
விமானங்களைக் கூட நொடிக்கு ஒன்றை பார்த்துவிடுகிறேன்,
ஆனால் பட்டாம்பூச்சிகள்.....
நான் ஒரு கடற்பயணம் மேற்கொண்டிதுந்தேன்,
இலக்கு என்னவென்றே தெரியாத ஒரு ஆழ்கடற்பயணம் அது.
வீசப்பட்ட ஒரு சூழ்ச்சிவளையின் மேல், சின்னச் சிறகை அழகாய் பறப்பி அமர்ந்திருந்தது ஒரு கடற்பட்டாம்பூச்சி.
அது ஒரு கருப்பு பட்டாம்பூச்சி,
விஷப்பூச்சிகள்தான் கருப்பாய் இருக்குமாம்.
கேள்விப்பட்டிருக்கிறேன்.
பயந்தே போனேன், விரலில் அமர்ந்தது,
பயணத்தின் ஒரு கருப்பு இரவில், தோளில் கிடந்தது இன்னமும் நினைவிருக்கிறது.
புயல், மழை, பேய் காத்து வீச
தொலைந்தே போனது பட்டாம்பூச்சி,
அவ்வப்போது நீந்தி வரும் டால்ஃபின்களை கேட்பதுண்டு,
கருப்பு பட்டாம்பூச்சி ஒன்றை கரைசேர்த்ததுண்டா என்று,
சுறாக்களும், நண்டுகளும் கூட கையை விரித்துவிட்டது,
கடலில் பூக்களே கிடையாதாம்,
இருந்திருந்தால் வேறொரு கருப்பு பட்டாம்பூச்சியை அவை கை காண்பித்திருக்கக்கூடும்,
விரக்தியில் கருப்புப்பட்டாம்பூச்சியை வரையத்தொடங்கியிருந்தேன்.
சட்டென படகு உடைந்து கரையை நோக்கிய விபரீத நீச்சல் பயணம் ஒன்றின்போது,
அது என்னுடனேயே பறந்துவருகிறது. பட்டாம்பூச்சியாய் அல்ல, வண்ணத்துப்பூச்சியாய்.
எங்கிருந்து வந்ததிதற்கு இத்தனை வண்ணங்கள் என்றதற்கு,
150 வயது கடலாமை சொன்னது,
அது பைசாசப்பூச்சியாம்,
எண்ணங்களை மீட்டெடுத்து வண்ணம்தீட்டிக்கொள்ளும் பைசாசப் பட்டாம்பூச்சியாம்.